மே தினப் பேரணிகள் தொடர்பில் ஆராயும் புலனாய்வுப் பிரிவு: எங்கிருந்துப் பெறப்பட்டது பணம்?

0
43

அரசியல் கட்சிகளின் தொழிலாளர் தினத்துக்காக அண்மையில் இடம்பெற்ற மே தினப் பேரணிகளில் கலந்துக் கொண்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையினர் இரகசியமான முறையில் ஆராய்ந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆராய்ச்சியின் நிறைவில் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

மே தினப் பேரணிகளுக்காக வருகைத் தந்திருந்த மக்கள் தொடர்பில் வெளியான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் அந்தந்த கூட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு சென்று சேகரித்த ஏனைய தகவல்கள் போன்றவற்றை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதிகளவிலான மக்கள் தொகை

இந்நிலையில், இம்முறை மே தினப் பேரணிகளுக்காக அதிகளவிலான மக்கள் தொகை பங்குபற்றியிருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி மே தினப் பேரணிகளுக்காக அதிகளவான மக்களை வரவழைக்க அரசியல் தலைவர்கள் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

இம்முறை மே தினப் பேரணிகளுக்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவழிந்துள்ள நிலையில் இதில் அதிகளவான தொகை மே தினப் பேரணிகளுக்காக மக்களை வரவழைக்க செலவிடப்பட்டுள்ளது.

எங்கிருந்துப் பெறப்பட்ட பணம்?

இந்தத் தொகை எங்கிருந்து பெறப்பட்டது என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர். மே தினப் பேரணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் 565 பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துக்கு மேலதிகமாக வருகைத் தந்தவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டுள்ளது.

தம்மிக பெரேராவின் பங்கேற்பு

இலங்கையின் முதற்தர செல்வந்தர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் விளங்கும் தம்மிக பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினப் பேரணியில் கலந்துக் கொண்டிருந்தார். அவருக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் சுமார் 30,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், குறித்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு தொழிற்சங்கத்தையும் ஆரம்பிக்க இடமளிக்காத நபர் தொழிலாளர் தின மேடையில் ஏறியிருந்தமை அதிருப்தியான ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.