தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனம்: நிதியுதவி வழங்கியுள்ள சுவிட்ஸர்லாந்து

0
177

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு“ சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சத்குணநாதன் இந்த முயற்சி ஏற்றுக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் தமிழர்களும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்தத் தேரர்களின் அறிக்கைக்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி அளித்திருப்பது உலகத் தமிழ் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர் உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும் இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு டிசம்பர் 30, 2023 அன்று இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில் இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

‘அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க’ என அழைக்கப்படும் ‘இமயமலைப் பிரகடனத்திற்காக’ உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து.

அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது.

பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது.

“மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல. மாறாக இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதத்தின் தாக்கத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் சமூக பொருளாதார அரசியல் ரீதியில் தாக்கும் காரணியாக இனங்காணுகின்ற போதிலும் சமூகங்களுக்கிடையிலான உறவுகளில் அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதை இம்முயற்சிகள் தவிர்க்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.” என அம்பிகா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய “இமயமலைப் பிரகடனத்திற்கு” நிதியுதவி அளித்தமை குறித்து கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவர் அல்லது ஜெனிவா அரசு எவ்வித தகவலையும் வெளியிடடவில்லை.