வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளை குறிவைக்கும் இலங்கை: நாடு கடத்த தீர்மானம்

0
141

வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் 30 குற்றவாளிகளை கைது செய்து அவர்களை நாடு கடத்துவதற்கான விசேட நடவடிக்கை ஒன்றை இலங்கை ஆரம்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி டுபாயில் செயற்படும் 29 பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் பிரான்ஸிலுள்ள ஒருவர் தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்தியை சுற்றிவளைப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்படமாட்டாது எனவும் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்குள் நாட்டில் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் முற்றாக இல்லாதொழிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் தொடர்பில் சட்ட சவால்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் உறுதியாக இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.