புத்தாண்டையொட்டி, மீண்டும் ஜேர்மனியில் வன்முறை வெடிக்கலாம் என தான் அஞ்சுவதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜேர்மனியில் வன்முறை வெடிக்கலாம்
புத்தாண்டையொட்டி, ஜேர்மன் தலைநகரான பெர்லின் மற்றும் பிற நகரங்களில் மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேஸர் ( Nancy Faeser), அச்சம் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெடித்த வன்முறையின்போது, தலைநகர் பெர்லினில் மட்டும் 41 பொலிசார் தாக்கப்பட்டார்கள், கூடவே, அவசர உதவிப் பணியாளர்களைக் குறிவைத்து ஏராளம் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
தீப்பற்றியதாக பொய் சொல்லி தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து, தீயணைப்புத்துறையினர் மீது பட்டாசுகளையும், பியர் கேன்களையும், கற்களையும் வீசித் தாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டும், புத்தாண்டுக்கு முன்தினம் மற்றும் புத்தாண்டு தினத்தன்று மீண்டும் கலவரம் வெடிக்கலாம், வன்முறை வெடிக்கலாம் என தான் அஞ்சுவதாக நான்சி ஃபேஸர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் மீது பழி
பொலிசார் மற்றும் அவசர உதவிப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த தாக்குதல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர் இருந்ததாக வேகமாக தகவல் பரவியது.
ஆனால், வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசிபேர் ஜேர்மானியர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 21 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்கள் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.