வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை – ஐந்து சாட்சியங்கள் பதிவு

0
128

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் உயிரிழந்த இளைஞனின் சகோதரன், தந்தை, உயிரிழந்த இளைஞனை பொலிஸார் கைது செய்யும் போது நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்தனர். 

சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் அடையாள அணி வகுப்புக்கும் உத்தரவிட்டார். 

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கின் மூன்றாவது சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நால்வரை மாத்திரமே கைது செய்துள்ளனர்.

ஏன் மற்றையவரை கைது செய்யவில்லை என்று மன்றில் கேள்வி எழுப்பினர். அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மற்றைய நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

உயிரிழந்த இளைஞனுடன் கைதான இளைஞனின் சாட்சியத்தின் அடிப்படையில் 04 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களாலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.