வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தலையின்றி முண்டமாக மீட்பு! – சட்டத்தரணி சுகாஸ்

0
174

காட்டுமிராண்டி தனமான முறையில் கொலை சம்பவமொன்று அரங்கேறியிருப்பதையும் என்னால் உணரமுடிவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி  க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிஸாரை சந்தித்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோரையும் சகோதர்களையும் சந்தித்துவிட்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நின்று கொண்டு இருக்கின்றேன். இங்கே சட்டவிரோதமாாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் வீதி தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த இளைஞரையும் அவரது நண்பர் ஒருவரையும் பொலிஸார் காரணமே இல்லாமல் கைது செய்து நான்கு நாட்கள் சட்டத்துக்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை.

உயிரிழந்த இளைஞரோடு கைது செய்யப்பட்ட மற்றுமொரு இளைஞர் தற்போது சிறையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகின்றது.

அவர்களின் குடும்பத்தவர்களிடம் சென்று தாங்கள் அவரை தாக்கவில்லை என்று பொலிஸார் கடிதமொன்றை தருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பாக நாளைய தினம் நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டு வர இருக்கின்றோம். மேலும் தற்போது நாங்கள் ஊடகங்களில் ஆதரவை கோரி நிற்கின்றோம். இங்கே ஒரு பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு விடயத்தை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இங்கே குற்றம் புரிந்ததும் பொலிஸார் குற்றத்தை விசாரிக்க போவதும் அதே பொலிஸார். ஆகவே ஊடகங்களாகிய நீங்கள் எங்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பூரண ஆதரவை தரவேண்டும்.

அல்லது இந்த வழக்கிலே உண்மை குழிதோண்டி புதைக்கப்படலாம். இந்த இடத்தில் நான் மேலதிகமாக ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றறேன்.

சில தினங்களுக்கு முன்னர் பொன்னாலையிலே தலையற்ற ஒரு முண்டம் கைப்பற்றப்பட்டிருந்தது. அது குறித்து அந்த பிரதேசத்தின் கிராம சேவையாளர் தெரிவித்திருக்கின்றார்.

தான் ஒரு மனநோயாளியை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் அணிந்திருந்த ஆடைகளையொத்த நபரே தற்போது சடலமாக மீட்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கிராமசேவையார் பொலிஸாரிடம் உயிரோடு ஒப்படைத்த மனநோயாளி, தலையற்ற முண்டமாக எவ்வாறு மீட்க்கப்பட்டார்? இந்த சம்பவமும் வட்டுக்கோட்டை பிரதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

இந்த சம்பவங்களுகள் அனைத்துக்கும் பொலிஸாரே முழுக்காரணம். ஆனால் இதில் ஒரு கேவலமான உண்மை என்னவென்றால் இற்றைவரை எந்தவொரு பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை என்பதே.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தை மதித்து ஜனநாயக வழியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டி வரும் என தெரவித்தார்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஏனைய பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிகமாக வரவழைக்கப்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 

இளைஞனை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதால் தான் இளைஞன் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதை செய்தனர் என கூறும் உயிரிழந்த  இளைஞனின் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

இந்நிலையில் இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் ஊரவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை  பொலிஸ் நிலைய பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

இதேவேளை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு ஏதுவாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். 

அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.