வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கிறோம்; இ.தொ.கா

0
135

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முன்மொழிவுகளை நாம் வரவேற்கின்றோம்.

நாட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று பின்னர் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். பங்காளிக்கட்சி என்ற வகையில் நாமும் எமது திட்டங்களை முன்வைத்து ஆதரவு வழங்கி வருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அனைத்து தரப்புகளுக்கும் ஏதோவொரு வகையில் நிவாரணம் வழங்கும் வகையில் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம்.

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும்.

அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இரு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதேபோல் நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி உட்பட பல நல்ல விடயங்களும் உள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவையில் இருப்பதால் மலையகம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.

அவரது அமைச்சுக்கும் வழமையைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம். மலையக மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய இணைந்து பயணிப்போம். ஏதேனும் திருத்தம் செய்யப்ப வேண்டி இருப்பின் அந்த யோசனையையும் காங்கிரஸ் முன்வைக்கும்.” என தெரிவித்தார்.