இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் மீது நடவடிக்கை கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பெரியளவில் போராட்டம் நடத்தப்பட்டது. பிரிஜ் பூஷன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் (ஏபிபி) அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா, நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷனை எதிர்த்து வாதிட்டார்.
அவர் பேசுகையில், “கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றிருக்கிறார். அச்சமயத்தில் அவர் ஒரு மல்யுத்த வீராங்கனையிடம் தவறாகவும் நடந்து கொண்டுள்ளார். பிறகு தந்தையை போல பழகினேன் என்று அவரிடம் கூறியதாக தெரிவித்தார்”
இதே போல பூஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் மோகன் தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார். இருதரப்பு வாதங்களுக்குப் பின் இவ்வழக்கானது அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.