பிலிப்பைன்ஸில் உள்ள தீவு ஒன்றில் சிறார்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும், இதற்கு பின்னணியில் ஒரு மத வழிபாட்டு தலைவர் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Jey Rence B Quilario என்பவர் தன்னை கடவுளின் அவதாரம் என கூறி வரும் நிலையில் ஒரு விசித்திர குழுவை உருவாக்கினார். இதில் 1,580 சிறார்கள் உட்பட மொத்தம் 3,500 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
Jey-விடம் சிக்கியுள்ள சிறார்கள் துன்புறுத்தப்படுவதாகவும் பாலியல் தொல்லைகள், கட்டாய திருமணங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சிறார்களை மீட்க களமிறங்கியுள்ள Save The Children அமைப்பு, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடுமைகளை அரங்கேற்றும் ஒரு வழிபாட்டு முறை உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள செனட்டர் ஒருவர் சிறார்களுக்கு கட்டாயத் திருமணம் போன்ற கொடுமைகளை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது தவறானது என்றார்.
இதனிடையில் தனக்கு 13 வயதாக இருந்தபோது 21 வயது இளைஞருடன் திருமணம் செய்து கொள்ளுமாறு குழுவின் தலைவரான ஜெய் ரென்ஸ் பி குய்லாரியோ தன்னை கட்டாயப்படுத்தியதாக க்ளோய் என்ற புனைப்பெயர் கொண்ட 15 வயது சிறுமி வீடியோ மூலம் சாட்சியமளித்துள்ளார். அதேவேளையில் தற்போது முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த குழு நிராகரித்துள்ளது.