உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் நேற்று முன்தினம் (17) அதிபர் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று நிறுவனங்களின் செயற்திறனுக்கு தனி முக்கியத்துவம் அளித்து, இந்தப் புதிய பொறிமுறையை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
விரிவான அறிக்கை
அத்துடன் இது தொடர்பான விரிவான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தயாரிப்பதற்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஒத்துழைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண ஆளுநர்கள், தத்தமது மாகாண சபை அதிகார வரம்புகளுக்குள் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான அவசரத் தேவையை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.