ஹோட்டலில் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முற்பட்ட பிரபல பாடகரால் பரபரப்பு

0
224

பாணந்துறை ஹோட்டலில் 1650 ரூபா கட்டணத்தை செலுத்தாமல் உணவகத்தில் இருந்து பிரபல பாடகர் வெளியேற முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை செலுத்தாமல் செல்ல முயன்ற இப்பாடகர் ஹோட்டல் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றிற்கு நேற்று முன்தினம் இரவு வந்த குழுவினர் உணவு உட்கொண்ட பின்னர் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முற்பட்ட போது ​​வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற மோதல்

சமன் டி சில்வா மற்றும் உணவகத்தின் ஊழியர்கள் குழுவிற்கும் இடையில் முதலில் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்டணத்தை செலுத்த மறுத்த அப்பாடகர் கோபத்துடன் நடந்து கொண்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாடகருடன் வந்த குழுவினர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் உணவகத்தின் காசாளரும் பணியாளரும் காயமடைந்துள்ளனர்.

உணவகத்தில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. காயமடைந்த காசாளர் மற்றும் பணியாளரால் பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.