மகனை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய் கைது!

0
173

ஆஸ்திரியாவில் 12 வயது மகனைத் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 32 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனைச் சிறிய நாய்க் கூண்டில் பூட்டிவைத்து பூஜ்ஜியத்திற்கும் குறைவான தட்பநிலைக்கு உட்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண் தற்போது தடுப்புக் காவலில் இருக்கிறார்.

அவரது செயல் குறித்து பொலிஸாரிடம் சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார். அவர் வேறொரு வீட்டில் வசிக்கிறார். அந்தப் பெண் தம் மகன் மீது ஒரு நாளில் பலமுறை குளிர்ந்த நீரை ஊற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக இருக்கும்போது அவர் சன்னல்களைப் பல மணி நேரத்துக்குத் திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாகச் சிறுவனின் உடல் வெப்பநிலை 26.8 பாகை செல்சியசுக்குக் குறைந்தது.

மேலும் அவனைப் பலமுறை அடித்து, உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு, நாய்க் கூண்டில் பூட்டி வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவனைச் சமூகப் பணியாளர் மீட்ட போது அவன் நினைவற்ற நிலையில் இருந்தான்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை மேம்பட்டு வருகிறது. ஆனால் மனத்தளவில் அவன் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.