கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கும் பணியில் இருந்து 73 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் தவறியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி சபையில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பாளர்களிடம் விசாரணை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
35 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த காலத்தில் கடமை தவறியதாக அடையாளம் காணப்பட்ட 62 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.