நீர்கொழும்பில் பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த 38 வயதான திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு பிடிபன வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். நீர்கொழும்பு பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அமெரிக்காவில் வாழும் இலங்கை கோடீஸ்வரர் போல் நடித்து சந்தேக நபர் பெண்ணை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை கோடீஸ்வரர்
சந்தேகநபர் போலியான முகநூல் பக்கத்தையும் உருவாக்கி அதனூடாக பெண்ணுடன் காதல் உறவை வளர்த்து வந்துள்ளார். சந்தேகநபர் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை கோடீஸ்வரர் போல் தன்னை காட்டிக்கொண்டு பேஸ்புக் ஊடாக இந்த உறவை பேணி வந்துள்ளார்.
விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அமெரிக்கா அழைத்துச் செல்வதாக முகநூல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் மூலம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
பெண்ணுடன் சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு, சந்தேக நபர் பெண்ணை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசர அறுவை சிகிச்சைக்காக தனக்கு ரூ. 4.8 மில்லியன் தேவையெனவும் கேட்டுள்ளார்.
விசாரணையில் தெரியவந்த உண்மை
பணத்தை வசூலிக்க அண்ணனை அனுப்புவார் என்றும் இலங்கைக்கு வந்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாகவும் சந்தேகநபர் உறுதியளித்திருந்தார். பின்னர் அந்த பெண்ணிடம் சென்று கோடீஸ்வரனின் சகோதரன் தானேயென குறிப்பிட்டு பணத்தை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைதாகியுள்ளார். இந்நிலையில் கைதான நபரை ஏப்ரல் 28 வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டார்.