மூக்கை விரலால் நோண்டும் லெமூர் மடகாஸ்கர் பகுதியில் காணப்படும் ஆயி-ஆயி இனத்தைச் சேர்ந்த லெமூர் (குரங்கு போன்ற உயிரினம்) ஒன்று தன்னுடைய நீண்ட விரலை மூக்கினுள் விட்டு நோண்டுவதை பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆன்-கிளேர் ஃபேப்ரே படம்பிடித்துள்ள நிலையில், அது பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்துள்ளது.
“அதனுடைய நீண்ட விரல் எங்கு செல்கிறது என்பதை நான் அறிய விரும்பினேன்” என சர்வதேச ஊடகம் ஒன்றிடம் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள டியூக் லெமூர் மையத்தில் நடந்த கூட்டம், பேராசிரியர் ஃபேப்ரே மற்றும் அவருடன் பணியாற்றுபவர்களை இந்தப் பழக்கத்தின் பரிணாம தோற்றம் குறித்து கேள்வி எழுப்ப வழிவகுத்தது.
ஆய்-ஆய் என்பது மடகாஸ்கரில் மட்டுமே காணப்படும் இரவில் நடமாடும் லெமூராகும். அவை விசித்திரமான, ஒல்லியான மற்றும் நீண்ட விரல்களால் மிகவும் பிரபலம்.
“அது தன்னுடைய முழு விரலையும் மூக்கினுள் நுழைக்கிறது. அதைப் பார்க்கும்போது அந்த விரல் எங்கே போகிறது, தன்னுடைய மூளைக்குள் விரலை நுழைக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டேன். அது பார்ப்பதற்கு விசித்திரமாகவும் சாத்தியமற்ற ஒன்றாகவும் தெரிந்தது” என சர்வதேச ஊடகம் ஒன்றிடம் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்தக் கேள்வி பேராசிரியர் ஃபேப்ரேவின் ஆர்வத்தை மிகவும் தூண்டிய நிலையில், அவர் ஆய்-ஆய் தலையில் முப்பரிமாண உடற்கூறியல் பகுப்பாய்வு நடத்தினார். “இது சைனஸுக்குள் நுழைகிறது.
சைனஸில் இருந்து தொண்டை மற்றும் வாய்க்குள் நுழைகிறது” என ஃபேப்ரே கூறுகிறார். ஃபேப்ரே தன்னுடன் பணியாற்றுபவர்களுடன் இணைந்து, மூக்கை நோண்டும் பிற உயிரினங்கள் குறித்த அறிவியல்பூர்வ ஆதாரங்களைத் தேடத் தொடங்கினார்.
அதில், மூக்கை நோண்டும் ப்ரேமேட்களின் 12 உதாரணங்கள் கிடைத்தன. பெர்னில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பாலூட்டிகளின் கண்காணிப்பாளரான பேராசிரியர் ஃபேப்ரே கூறுவதுபடி, மனிதர்கள் உட்பட எந்தவொரு விலங்கும் ஏன் மூக்கை நோண்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வது தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன.
“இது மோசமான பழக்கமாக பார்க்கப்படுவதால்தான் இந்தப் பழக்கம் குறித்து குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன” என்கிறார் ஃபேப்ரே. மக்களின் நடத்தைகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் இந்தப் பழக்கம் எத்தனை பொதுவானது என்பது தெரியவந்தது.
பெரும்பாலான மனிதர்கள் மூக்கை நோண்டுவதும், அதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை என்பதும் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. மூக்கு நோண்டுவதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ளன.
ஒரு சில ஆய்வுகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை பரப்புவதில் இதற்குப் பங்கிருப்பதாகக் கூறுகின்றன. ஆனால், மூக்கை நோண்டுவதும் அதை உண்பதும் பற்களுக்கு நன்மை பயக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது. மூக்கை நோண்டுபவர்களுக்கு பற்களில் குறைவான வெற்றிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சளியில் நோய் எதிர்ப்பு புரதங்கள் இருப்பதால், மூக்கின் சளியை உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கலாம் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.
“இந்தப் பழக்கம் ஏதேனும் காரணங்களுக்காக படிப்படியாக உருவாகியிருக்கலாம். அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்கிறார் ஃபேப்ரே.
“இதன் செயல்பாடு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதே நேரத்தில் இந்தப் பழக்கம் சாதகமாகவும் இருக்கலாம்” என ஃபேப்ரே சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறினார்.
நிறைய விலங்குகளிடம் இந்தப் பொதுவான பழக்கம் இருப்பதால், அவை வெறுமனே அருவருப்பானதாக இல்லாமல் சில உயிரினங்களுக்கு நன்மையும் பயக்கலாம். இது தொடர்பில் உண்மையிலேயே நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார் ஃபேப்ரே.