உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது – நீதி அமைச்சர் எச்சரிக்கை

0
28

ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அவதானிக்க முடிந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சகோதரருக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.

“நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது. உங்கள் ஊடகங்கள் மூலம் எங்களுக்கு அல்லது தனிநபர்களுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஜனாதிபதி மன்னிப்பு பெற முடியாது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறை மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நோயும் இல்லாமல் தங்கியிருந்தார் என்பதையும் நீதி அமைச்சர் வெளிப்படுத்தினார்.

“அனைத்து கைதிகளுக்கும் சமமான சிகிச்சை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இறுதியில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எந்த நோயும் இல்லை என்பதைக் கண்டறிந்தது. இதனையடுத்து துமிந்த சில்வா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.