உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்… 4 உலக சாதனைகளை படைத்த 22 வயது இந்தியர்!

0
832

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என அழைக்கப்படும் நீலண்ட பானு தற்போது தொழில்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

Neelkantha Bhanu the world’s fastest human calculator

நீலகண்ட பானு

கடந்த 1999 ஆம் ஆண்டு ஆந்திர பிரேதச மாநிலம் எலுருவில் பிறந்தவர் நீலண்ட பானு (Neelkantha Bhanu). இவருடைய பெற்றோர் ஸ்ரீனிவாஸ் ஜொன்னலகட்டா மற்றும் ஹேமா சிவ பார்வதி ஆவர். இவர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் தொடரில் 2020 Mental Calculation World Championship-ல் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். கணிதத்தில் பயங்கர ஆர்வமுள்ள இவர் இதுவரையில் 4 உலக சாதனைகளையும் 50 முறை லிம்கா சாதனை பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார். அதிவேகமாக கணக்கிடுவதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்பதே உண்மை. அதனாலேயே இவருக்கு உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Neelkantha Bhanu the world’s fastest human calculator

ஏராளமான கணித போட்டிகளில் வெற்றிகளை வாரி குவித்த பானு தன்னுடைய 17 வயதில் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீவன் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். அப்போதுதான் தனது வாழ்வின் இலக்கை அவர் கண்டறிந்திருக்கிறார்.

கணித பயம்

கடந்த 2020 ஆம் ஆண்டு Bhanzu எனும் நிறுவனத்தை துவங்கினார் பானு. இதன் முக்கிய நோக்கமே குழந்தைகளிடத்தில் உள்ள கணிதம் குறித்த பயத்தை போக்குவதுதான் என்கிறார் இவர். இதுகுறித்து அவர் பேசுகையில்,”குழந்தைகள் மொழிப்பாடங்களை கண்டு பயப்படுவதில்லை. மாறாக அவர்கள் கணிதத்திற்கு பயப்படுகிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களிடம் தன்னம்பிக்கையை யாரும் அளிப்பதே இல்லை” என்கிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக குழந்தைகளின் கணித திறனை 5 மாதங்களில் 4 மடங்கு உயர்த்தி வருவதாகவும் பானு தெரிவித்திருக்கிறார்.

Neelkantha Bhanu the world’s fastest human calculator

விபத்து

கணிதத்தில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்து பேசியுள்ள பானு,”நான் ஹைதராபாத்தில் பள்ளிக்குச் சென்றுவந்த சாதரண மாணவன். என்னுடைய ஐந்தாம் வயதில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் என் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்போது என்னுடைய மூளை வளர்ச்சியை தூண்டும் விதமாக புதிர்களை தீர்ப்பது, எளிய மனக் கணக்குகளை செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். அப்படிதான் எனக்கு கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன்பிறகு செஸ் போட்டிகளிலும் கலந்துகொள்ள துவங்கினேன். அப்போது எண்கணித சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. நான் அதில் கலந்துகொண்டேன். அதில் மூன்றாம் பரிசு கிடைத்தது. தொடர்ந்து நான் என்னுடைய கணித அறிவை வளர்த்துவந்தேன். ஆனால், உலகின் அதிவேகமான கால்குலேட்டர் பட்டம் பெறுவேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார்.

தற்போது, பானுவின் Bhanzu நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தொடர்ந்து உலக அளவில் குழந்தைகளிடையே உள்ள கணிதம் குறித்த பயத்தினை போக்குவதையே லட்சியமாக கொண்டு செயல்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பானு.