வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (05.07.2023) காலை இடம்பெற்றுள்ளது.
குருணாகல் – வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச் சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
குடும்பத்தில் முரண்பாடு
இந்நிலையில் பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் சில வாரங்களாக இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து விரக்தியடைந்த பெண், இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பெண்ணுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
