இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர் தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடித்துக் கொல்ல முயற்சித்ததாக கணவன் முறைப்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது தமது பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர் “ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்” என்று கூறி முறைப்பாடு அளித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும் ஆனால் ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள் நான் தூங்கும்போது என்னைக் கொல்லக்கூடும்” என்றும் அவர் புலம்பியுள்ளார்.
இந்நிலையில் அந்த முறைப்பாடு குறித்த விசாரணை செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணைப்பிரிவு நீதிபதி மற்றும் பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.