தமிழகத்தின் கொடைக்கானலில் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த இளைஞர் தவறி விழுந்த நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றதாக கூறப்படுகின்றது. இதனால் அருவி மற்றும் நீரோடைகளில் நீர்வரத்தும் அதிகமாக காணப்படுவதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் (28) என்ற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி மங்களம்கொம்பு மலைக்கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தனது நண்பர்களுடன் பாறை சரிவுகளில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.
