கமல்ஹாசனின் கன்னடம் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் “நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?” என கேள்வி எழுப்பியுள்ளது.
நாளை மறுதினம் (06.05) தனது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும் திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் “இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள் நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?
கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள். கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக் கேளுங்கள். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
முன்னதாக கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஜூன் 5 ஆம் திகதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது திரைப்பட வெளியீட்டுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் படத்தினை அமைதியாக வெளியிடுவதற்கும் அப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பினை உறுதி செய்யவும் அவசரமாக தலையிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்திருந்தார்.
கமல்ஹாசன் தரப்பில் முன்னிலையான உயர் வழக்கறிஞர் தியான் சின்னப்பா படத்தின் வெளியிட்டு திகதியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ‘‘தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என குறிப்பிட்டார்.
இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.