உரிமைகளையும் அபிவிருத்திகளையும் இலகுவாக வென்றெடுக்க தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினுடைய வெற்றியின் பங்காளிகளாக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். வாக்குரிமையே மக்களின் ஜனநாயக ஆயுதம். அந்த ஆயுதத்தை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், நமது முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் நெருங்கிவிட்டது. இன்னும் 06 நாட்களுக்கு பிறகு வாக்குரிமையை மக்கள் பயன்படுத்த போகின்றனர்.இம்முறை வாக்காளர்கள் அனைவரும் தமது வாக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தல் அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படியானால் அனுபவமுள்ள முதிர்ச்சியுள்ள, நாட்டை மீட்டெடுத்த தலைவரே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். அந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை.
வரிசை யுகத்தில் நின்று வலி சுமந்த நாட்களை நாம் மறந்துவிடக்கூடாது. இன்று இயல்புநிலை உள்ளதெனில் அதற்கு ஜனாதிபதியே காரணம். எதிரணி வேட்பாளர்கள் சுதந்திரமாக அரசியல் செய்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தவரும் அவரே.

நெருக்கடியான சூழ்நிலையிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, உறுமய திட்டம், அஸ்வெசும மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் பல பல விடயங்களை அவர் செய்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.
எனவே, தற்போதுள்ள இந்த சூழ்நிலையை மாற்றியமைத்தால் நாட்டின் பொருளதாரம் மீண்டும் படுகுழிக்குள் விழும். வரிசை யுகம் ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டும். எனவே உங்கள் வாக்கை சரிவர பயன்படுத்துங்கள்” என்றார்.