இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser அம்மையார் தனது பதவிக் காலம் முடிவிற்கு வருவதையிட்டு, அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
இலங்கை – ஆஸ்திரியா உறவை முன்னெடுத்துச் செல்வதற்காக திருமதி. Wieser ஆற்றிய சேவைகளைப் பாராட்டிய பிரதமர், குறிப்பாக நிலையான எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆஸ்திரிய அரசாங்கத்தின் முதலீடுகளை ஈர்ப்பதில் விசேட கவனம் செலுத்தி இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன் ஆஸ்திரியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய துறைகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிகாட்டுவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டிய தூதுவர், ஆஸ்திரியாவின் கல்வி முறை பற்றிய தகவல்களையும் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார். அத்தோடு இருதரப்பு ஒத்துழைப்பை வலுவூட்டும் வகையில் முன்னணி ஆஸ்திரியப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தர வேண்டுமென பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகாவத்த, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. சுகீஷ்வர குணரத்ன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி. கௌமதி விஜேசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்து கொண்டனர்.