வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் கூறி நிக்கோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரோவுக்கு இந்தியாவுடன் உள்ள தொடர்பு பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள்.
கத்தோலிக்க மதத்தவரான மதுரோ, புளோரசை கரம் பிடிப்பதற்கு முன்னர் அவரை சாய் பாபாவிடம் புளோரஸ் அறிமுகப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னர், ஆந்திர பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி பகுதியில் அமைந்த பிரசாந்தி நிலையம் ஆசிரமத்திற்கு 2005-ம் ஆண்டு ஒன்றாக சென்று சத்ய சாய் பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
அவருடன் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. பல தசாப்தங்களாக சாய்பாபாவின் தீவிர பக்தராக மதுரோ இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய அரண்மனையில் தனி அலுவலகத்தில் சைமன் பொலிவர் மற்றும் ஹியுகோ சாவேஸ் ஆகியோருடன் சாய்பாபாவின் புகைப்படமும் தொங்க விடப்பட்டது.
2011-ம் ஆண்டில் சாய்பாபா மறைந்தபோது, அப்போது வெளியுறவு மந்திரியாக இருந்த மதுரோவின் வழிகாட்டுதலின்படி அதிகாரப்பூர்வ இரங்கல் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அந்த நாள் ஒரு தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று 2024-ம் ஆண்டில் வெனிசுலா அரசு நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின்போது ‘ஓம்’ என்ற அடையாளத்துடன் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன.
வெனிசுலாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்ட போதிலும் பல ஆண்டுகளாக மதுரோவின் ஆட்சியின் கீழ் சத்ய சாய் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம் நடப்பு ஆண்டில் நடைபெற இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



