அமைச்சரவை அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு வரிசையில் பலர் காத்திருப்பதால் அரசாங்கத்தில் இருக்க முடியாதவர்கள் வெளியேறலாம் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய இறுதி உரையின் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘கடந்த ஒரு மாதகாலமாக இந்த நாட்டில் கிரிக்கெட் சபையை சரிசெய்கிறோம் எனக் கூறி அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் செயல் நடந்தது. இந்த அரசாங்கம் அனைவரும் சேர்ந்து உருவாக்கப்பட்டது. அரசாங்கம் உயிர்பெறும் நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க சிலர் திட்டமிடுகின்றனர்.
அமைச்சுப் பதவி வழங்கினால் அந்த அமைச்சருக்கு முதுகெலும்புடன் வேலை செய்யும் திறன் இருக்க வேண்டும். ஜனாதிபதி மீது சந்தேகம் இருந்தால் ஒரே அமைச்சரவையில் இருக்க முடியாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவிருந்த ரொஷான் ரணசிங்க நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சுப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்த பின்புலத்திலேயே சாமர சம்பத் தசநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.