எமக்கோ தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வைத்துச் செய்வதற்கு வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்தார்.
வவுனியா (Vavuniya) உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் (ITAK) இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் வவுனியா மாநகர சபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும்.
அதேபோல வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர், பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சனை.
சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக் கொள்வோம். அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்க கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும். எனவே வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்க கூடிய சூழல் இருக்கிறது.
அத்துடன் இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சி மன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடரவேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இந்த இணக்கப்பாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவிற்கு வருவார்கள் என எதிர்பார்கிறோம்.

வடக்கு – கிழக்கு முழுவதும் தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து பயணிப்போம். வவுனியா போன்று ஏனைய இடங்களிலும் நாங்கள் கூடிய ஆசனங்களைப் பெற்ற இடங்களில் ஆட்சி அமைப்பதற்கான செயற்பாட்டை மேற்கொள்வோம்.
எங்களுக்கு ஆட்சி அமைக்க உதவி செய்யும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வெளியே உள்ள சில கட்சிகள் அல்லது குழுக்கள் தாம் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் எனக் கோரியமை தொடர்பிலும் பேசியுள்ளோம். இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இலங்கை மக்கள் சர்வதிகாரம், கடத்தல், கொள்ளை, கற்பழிப்பு வேண்டாம் எனத் தான் 3 வீத வாக்கைப் பெற்றிருந்த ஜேவிபிக்கு 42 வீத வாக்கை கொடுத்து மக்கள் இந்த ஆசனங்களை கொடுத்திருந்தார்கள்.
இல்லை நாங்கள் 3 வீதத்திற்கு தான் போகப் போறோம் என்றால் அது அவர்களின் பிரச்சனை. வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வைச்சு செய்யப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது. என்னத்தை வைச்சு செய்யப் போறீர்கள்.
யாரை வச்சு செய்யப் போறீர்கள். அதையும் கூற வேண்டும். வைச்சு செய்வதற்கு வடக்கில் இடமில்லை. இதே நிலையில் தேசிய மக்கள் சக்தி செல்வார்களாக இருந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.



