ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்தினால் இதுவரை தாக்கியதைப் போல் 20 மடங்கு கடுமையான தாக்குதலை தொடுப்போம் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடனான போரை அடுத்து, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளுடன் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல் பகுதியில் சிக்கியுள்ளன.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தும் வகையில் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொண்டால் இதுவரை அவர்கள் சந்தித்த தாக்குதல்களை விட இருபது மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா அவர்கள் மீது தொடுக்கும்.
இதன் விளைவாக, ஒரு நாடாக ஈரானால் மீண்டும் எழுந்து நிற்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிடும். மரணம், தீ மற்றும் பாதுகாப்பற்ற பதற்றமான சூழல் ஆகியவை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அத்தகைய ஒரு நிலை ஏற்படாது என்று நான் நம்புகிறேன் அதற்காகப் பிரார்த்திக்கிறேன்.
இது அமெரிக்காவின் சார்பாகச் சீனாவுக்கும், ஹார்முஸ் நீரிணையைத் தங்கள் பயன்பாட்டிற்குப் பெருமளவில் பயன்படுத்தும் மற்ற அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் ஒரு பரிசாகும். இந்தச் செயல் பெரிதும் பாராட்டப்படும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



