வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்ததை போன்று மனிதநேயத்தின் மீது அமெரிக்காவிற்கு நம்பிக்கை இருந்தால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர்கள் ‘சிறைபிடிக்க’ வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
துருக்கியும் நெதன்யாகுவைக் கடத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர் “பாகிஸ்தானியர்கள் அதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்” என்றும் கூறினார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய ஆசிப் நெதன்யாகுவை “மனிதகுலத்தின் மிக மோசமான குற்றவாளி” என்று வர்ணித்தார். மேலும் காசாவில் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அத்துமீறல்களுக்கு இணையான கொடுமைகள் வரலாற்றிலேயே இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
“கடந்த 4,000-5,000 ஆண்டுகளில் இஸ்ரேல் பலஸ்தீனியர்களுக்குச் செய்ததை எந்தவொரு சமூகமும் செய்ததில்லை. அவர் (நெதன்யாகு) மனித குலத்தின் மிகப்பெரிய குற்றவாளி. உலகம் இதைவிடப் பெரிய குற்றவாளியைக் கண்டதில்லை” என்று ஆசிப் கூறினார்.



