பிரித்தானியா தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டின் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, ஜன்னலில் தலைகீழாக தொங்கிய நிலையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் நடந்த சம்பவம் தொடர்பான காணொளி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லிசா ரோலேண்ட் என்ற அந்த பெண், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்தபோது பையில் சாவியை காணவில்லை.
இதன்போது, வீட்டின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டது நினைவுக்கு வந்தது. எப்படி உள்ளே போவது என்று யோசித்த லிசா, வீட்டின் ஜன்னல் திறந்திருந்ததை கவனித்தார்.
அந்த வழியாக ஏறி குதித்து உள்ளே செல்ல முடிவு செய்த அவர், உதவிக்கு தன் சகோதரியை அழைத்துள்ளார்.
சகோதரியின் உதவியால் ஜன்னல் வழியாக ஏறிய லிசா, ஜன்னலின் மேற்பகுதியில் சிக்கி உட்பக்கமாக இறங்க முடியாமல் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார்.

உடல் முழுவதும் உட்பக்கமாக தொங்கிக்கொண்டிருக்க, கால் மட்டும் வெளியே நீண்டுகொண்டிந்ததால், அவரை வெளிப்புறமாகவும் இழுக்க முடியாது.
அவர் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த நிலையைப் பார்த்த அவரது சகோதரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பின்னர் கைகளை ஊன்றி குட்டிக்கரணம் அடித்து ஒருவழியாக வீட்டிற்குள் லிசா சென்றுள்ளார்.
மிகவும் வேடிக்கையான இந்த காணொளி இணையத்தில் வெளியான விடயம், தோழி ஒருவர் கூறியபிறகே லிசாவுக்கு தெரியவந்துள்ளது.
இந்த அனுபவத்திற்குப் பிறகு வீட்டின் சாவியை லிசா கழுத்திலேயே செயினுடன் கட்டி தொங்கவிட்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.