பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும்; நளின் பண்டார சூளுரை

0
7

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது பட்டலந்த விசாரணை அறிக்கைக்கையை சபைக்கு சமர்ப்பித்து சபை முதல்வர் பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அங்கு நடந்த சம்பவத்தை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

ஆனால் பட்டலந்த சம்பவம் ஏன் உருவானது என்ற பிரச்சினை உள்ளது. 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலத்தில் பயங்கரவாதம் இருந்தது. அதனால் இரு தரப்பிலும் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

கிராம சேவகர்கள், வைத்தியர்கள், பொலிஸார் மிளேட்சத்தனமாக கொல்லப்படட்டனர். இதனால் பட்டலந்த தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதுடன் 88 மற்றும் 89 காலப்பகுதியில் கொல்லப்பட்ட பலரின் குடும்பங்களின் பிள்ளைகள் இருக்கின்றனர். உங்களின் இராணுவ அமைப்பிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர்.

இந்த வரலாறு மூடப்பட்டிருந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மறுநாளே நினைவுக்கு வர வேண்டிய விடயம் அல்ஜசீராவில் கூறப்பட்டதை தொடர்ந்தே இது நினைவுக்கு வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேடியறிந்து அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். இது ஒரு பக்கசார்பாக இருக்கக் கூடாது. கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் எமது ஊர்களில் இருக்கின்றனர்.

பணிக்கு சென்ற காரணத்தினால் கொல்லப்பட்டவர்கள் இருக்கின்றனர். இது தொடர்பில் இவர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

இதனால் பட்டலந்தவுக்கும் அப்பால் பரந்தளவான விசாரணை நடக்க வேண்டும். உண்மையை தேடியறிய வேண்டும். பட்டலந்தவுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்றார்.