குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ள சம்பவம் தமிழர்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றக் கட்டளையை மீறி அவர்கள் குருந்தூர் மலை புத்தரை வழபாடு செய்துள்ளனர். இந்நிலையில் நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளது.

புகைப்பட ஆதாரத்துடன் முறைப்பாடு
இது தொடர்பில் கல்கமுவ சந்தபோதி தேரருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் புகைப்பட ஆதாரத்துடன் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி, குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில் பொலிஸாரால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

நீதிமன்றம் விதித்த கட்டளைகள்
அதோடு நிகழ்வுக்கு முதல் நாளான 13 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸார் வழிபாட்டுக்கு, முல்லைத்தீவு நீதிமன்றில் தடையுத் தரவைக் கோரியிருந்தனர். இதன்போது முல்லைத்தீவு நீதிமன்றால் சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
அக் கட்டளைகளில் குறிப்பாக ‘குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவ்விதமான சிலைகள் வைப்பதோ, சின்னங்கள் வைப்பதோ, கட்டுமானங்கள் மேற்கொள்வதோ தொல்லியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவரும் ஏதேனும் சிலைகள் வைத்தாலோ, சிவலிங்கம், திரிசூலம் போன்றவற்றை நிறுவினாலோ, ஏதேனும் கட்டுமானங்களையோ, நிர்மாணங்களையோ செய்தால் அது நீதிமன்றக் கட்டளையை மீறும் நீதிமன்ற அவமதிப்புக்குற்றமாகும்.
எனவே எவரும் இவ்வாறான செயல்களைச் செய்தால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவிலா
இந்நிலையில் நீதிமன்றால் வழங்கப்பட்டளைகளை மீறும் விதமாக கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டதாக நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை அடிவாரத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் உள்ள நிலையில் , புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, குருந்தூர்மலையில் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவிலா என்பது போல சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் பௌத்த பேரினவாதிகளுடன் புத்தரை வழபடசென்றிருந்தமை தமிழர்கள் மத்தியில் விசனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.