வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது பார்வையற்றோருக்கான வீதி சமிக்ஞை விளக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் மட்டக்களப்பில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதி சமிக்ஞை குறித்த பிரதேசத்தில் உள்ள விழிப்புலனற்றோரின் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குனவர்தன,
குறித்த இடத்தில் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் நிலையம் ஆகியன அமையப் பெற்றிருக்கின்றன.
இலங்கையின் எப்பாகத்திலும் இவ்வாறான விசேட தேவையுடையவர்களை காணும்பொழுது பேருந்து சாரதிகள் அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் அல்லது அவர்களுக்காக வழிவிட வேண்டும் என இலங்கைப் போக்குவரத்து சபை தலைவருக்கு பணிப்புரை விடுப்பதாக தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் ஏற்படுகின்ற வாகன நெரிசலை தடுக்கவும் வீதி விபத்துக்களை தடுக்கவும் மேற்படி வீதி சமிக்ஞை விளக்குகள் பயன்படும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்ட வீதி சமிஞ்சை விளக்கினை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.
குறித்த திறப்பு விழா நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர்களான எஸ்.ரீ. பாலகம்லட், சிவனேசத்துரை சந்திரகாந்தன ஆகியோர் கலந்து கொண்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட அதன் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.