யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத் தருவதாக என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக தொடரும் சிக்கல் நிலை தொடர்பில் அங்கஜன் இராமநாதன் கவனம் செலுத்தியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் மின்சார மாற்றீடுகள் இல்லாததாலும் அதற்கான மின் பிறப்பாக்கிகள் வழங்கப்படாத நிலையாலும் மருத்துவ பயன்பாடுகள் அற்ற நிலையில் காணப்படுவதாக அறிய முடிந்தது.
இத்தகைய சூழலில் குறித்த பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் பணிப் பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தையும் உணர்ந்து இந்த விடயம் தொடர்பில் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.
இதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் போதிய மின்பிறப்பாக்கி வசதிகள் வழங்கப்படும் வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகளை தற்காலிக ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்க சிலர் முன்வந்துள்ளனர்.
இதனூடாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவற்றை இயங்குநிலைக்கு கொண்டு வந்து மக்களுக்கான வைத்திய சேவையை வினைத்திறனுடன் வழங்கமுடியும் என கருதுகிறேன்.
எனவே இது தொடர்பில் வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் ஆறுமுகம், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியோரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



