இந்தியாவின் அபிவிருத்திகளுக்கு தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல, முதலில் நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் புதிய பாலம் அமைப்பது தொடர்பாக அண்மையில் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்ற போது ஆராயப்பட்டதாகவும், அது தொடர்பான தொழிநுட்ப பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
இலங்கை – இந்திய ஒப்பந்தம்
அந்த விடயத்திலே எங்களுக்கு எந்தவிதமான எதிர் மனப்பாங்குகளும் இல்லை. அப்படி ஒரு பாலம் அமைக்கப்படுகிறது என்றால் அதுவும் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம்.
ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா தமிழர்கள் சார்பாக தமிழர்களுடைய பிரதிநிதியாக 1987ஆம் ஆண்டிலே இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலேயே கையொப்பமிட்டு இருந்தது. தமிழர் தரப்பாகத்தான் அவர்கள் அதில் கையொப்பமிட்டு இருந்தார்கள்.

அந்த காலகட்டத்திலேயே கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் அல்லது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான தீர்வுகள் என்பது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆகவே பொறுப்பு வாய்ந்த ஒரு தரப்பு என்ற வகையில் இந்தியாவினால் நேர்மையாக இதய சுத்தியோடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கின்ற ஆதங்கமும் கேள்வியும் தமிழ் மக்களிடையே நீண்ட காலமாக இருக்கிறது.
அதிகாரப் பகிர்வு
புதிதாக நாங்கள் பாலம் அமைக்கிறோம் அல்லது எண்ணெய் குழாய்களை கொண்டு வருகிறோம் என்பது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவதாக அமையாது.
ஆகவே முதலில் 35 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு, கிழக்கிலே பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட ஒரு அதிகாரப் பகிர்வினை அடிப்படையாக கொண்டு கொண்டுவரப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் ஊடான திருத்தம் என்பதை இந்தியா ஏன் இவ்வளவு காலமும் நடைமுறைப்படுத்தவில்லை.
இப்பொழுதும் கூட 13 மைனசுக்கு போய் இருக்கிறது. அதில் பொலிஸ் கூட இல்லை. ஆகவே இந்த காலகட்டங்களை எல்லாம் விட்டு, இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு இந்தியா ஒரு புதிய பாலம் அமைத்தல், எண்ணெய் குழாய்களை செய்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஆகவே நாங்கள் தெளிவாக ஒன்றை இந்தியாவிலே இருக்கின்ற நிபுணர்கள், அரசியல் ஆய்வாளர்கள், இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களை நாங்கள் வினையமாக கேட்பது என்பது நாங்கள் என்று மெல்ல மெல்ல இங்கு வாழ முடியாமல் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலில் நிரந்தரமாக நாங்கள் இந்த மண்ணிலே வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியா உருவாக்கினால் நாங்கள் அடுத்த கட்ட அந்த எண்ணங்களுக்கு எதிர்பு மன பாங்கோடு இல்லை என்பதை தெளிவுபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.