நாமலுக்கு ஆதரவு: கையொப்பம் இடும் நிகழ்வில் பங்குபற்றிய கோட்டாபய

0
77

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் வேட்பு மனு கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச இன்று புதன்கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்சவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரால் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அந்த கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக காணப்பட்டது. மேலும் பொதுஜன பெரமுன தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை வேட்பாளாராக நிறுத்தும் எனவும் பரவலாக பேசப்பட்டது.

கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஒகஸ்ட் 06 ஆம் திகதி செய்திகள் வெளியாகின. இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டார்.