ராஜஸ்தானில் வேற்று மத நபரை திருமணம் செய்த பெண் மீது கணவரின் உறவினர் உள்பட 3 பேர் துப்பாக்கி சூடு நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சிலர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அந்த பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கு உதவியாக அவரது நண்பர்களான முகமது ராஜா மற்றும் ராஜூ மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய பீகாரை சேர்ந்த காலிம் ஆகியோர் ஒன்று கூடி ஆலோசித்து உள்ளனர்.

இதன்பின்பே, துப்பாக்கியால் சுடுவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஜெய்ப்பூர் பொலிசார், நேற்றிரவு அதிரடி வேட்டை நடத்தி தாக்குதல் நடத்தி தப்பிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர் என்று துணை ஆணையாளர் வந்திதா ராணா கூறியுள்ளார்.

மேலும் தப்பியோடிய அபித் என்ற மற்றொரு நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
