யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண் சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ முன்னிலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டது வெளியாகியுள்ளது.
அந்தப் பெண்ணின் தலையில் குத்தப்பட்டு முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டுள்ளார். அவரது நுரையீரலில் நீர் புகுந்து மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் வீட்டை விட்டு புறப்படும்போது 10 பவுண் நகை அணிந்திருந்தார். ஆனால் அவரது சடலத்தில் நகைகள் காணப்படவில்லை.
அவர் வீட்டை விட்டு புறப்படும்போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் கூறியிருந்தார். எனினும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி அந்தப் பெண் தனது கணவரிடம் கூறிய நபர்களுடன் சென்றதாகத் தெரியவில்லை.
அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாகச் செய்திகள் வெளியான போதும் உடற்கூறாய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.