ரணில் பக்கம் தாவும் இருவர் – வேலுகுமார் தகவல்: மறுக்கும் எம்பிக்கள்

0
98

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடந்து கருத்து வெளியிட்ட வேலுகுமார், இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகிய இருவரும் எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி தங்களுடைய ஆதரவை தெரிவிப்பர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினுடாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பளம் சாத்தியமாகி இருப்பதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி அந்த கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

ஆனால், இது தொடர்பாக வேலுச்சாமி இராதாகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டு வினவிய போது “இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. அவர் விருப்பத்திற்கு எதை கூறினாலும் அது நடக்காது. எங்களுக்கு அப்படி அவரை போல் கட்சி தாவும் அவசியம் இல்லை“ என தெரிவித்தார்.