முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்தப்பட்டமை மற்றும் அவரது மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் பலத்த காயங்கள் தொடர்பான விசாரணை தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.
தமக்கெதிரான குற்றம் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பான மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அரசியல் தஞ்சம் பெற்று தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பொத்தல ஜெயந்த இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து தம் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2017ஆம் ஆண்டிலும் உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
அத்துடன் நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தக் கலந்துரையாடலில் அவர் வெளிப்படுத்தினார்.