பிரான்ஸிலும் வெடித்த போராட்டம்; 250க்கும் மேற்பட்டோர் கைது; அச்சத்தில் மக்கள்

0
38

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 250 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றியதினம் புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு – செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் அரசின் ‘ரினைசன்ஸ்’ கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர்.

அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார். இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 18 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் பிரான்சில் மேலும் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.