ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறந்து உலகளாவிய சந்தைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் 17வது நாளாக நீடித்துள்ள நிலையில் உலக அளவில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்ததை அடுத்து இந்த மாத ஆரம்பத்தில் ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலக அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் எரிபொருள் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நெருக்கடியைத் தீர்க்க தலையிட்டுள்ளதாக கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போதைய மோதலில் பிரித்தானியா எந்த வகையிலும் தலையிடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஹர்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறப்பதற்கும், அப்பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்புவதற்கும் ஆதரவளிக்குமாறு நேட்டோ தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியா நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பினர் நாடாக இருக்கின்றே போதிலும் அமெரிக்க ஜனாதிபதி அழைப்பை நிராகரித்துள்ளது. பிரித்தானியா மட்டுமின்றி ஏனையு ‘நேட்டோ’ நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடன் போரில் ஈடுபட மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



