ஹரீன் மற்றும் மனுஷவுக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி: தேர்தல் சட்டங்களை மீறுவதாக அனுர குற்றச்சாட்டு

0
147

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இரண்டு விசேட ஜனாதிபதி ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசகராக மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை உயர் நீதிமன்றம் அண்மையில் இரத்துச் செய்திருந்தது. இந்நிலையில் அவர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

எவ்வாறாயினும் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமித்தமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் புதிய நியமனங்களைத் தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், சுற்றறிக்கையை மீறி குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முன்னைய அமைச்சுக்களின் ஆலோசகர்களாக ஹரீன் மற்றும் மனுஷவை நியமித்துள்ளார்.

இதன் மூலம் இந்த அமைச்சுக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கும் வாகனங்கள் மற்றும் நிதிகள் போன்ற சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கும் இடமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அகில விராஜ், சாகல ரத்நாயக்க, ஆஷு மாரசிங்க போன்ற ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டு நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அரச நிதியினால் முழு ஐக்கிய தேசியக் கட்சி முகாமும் மகிழ்விக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறி அரச வளங்கள் மற்றும் நிதியை தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக தவறாக பயன்படுத்துவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவால் அதனை தடுக்க முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.