முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு வருகைத் தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு கொழும்பு விஜேராம அரச இல்லத்தில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு இடம்பெயர்ந்தார்.
இதனையடுத்து, அவரைப் பார்வையிடுவதற்காக நாள்தோறும் மக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் படையெடுத்து வருகின்றனர்.
மேலும், இவ்வாறு வரும் பொதுமக்கள் உணவுகள் உள்ளிட்டவற்றை மகிந்த ராஜபக்சவுக்கு எடுத்து வருவதுடன், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரோடு புகைப்படம் எடுப்பதற்கு தற்போது தடை விதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கிய தற்போதைய அரசாங்கம், தனது பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளது என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க அரசாங்கம் விரும்பினால், அதை மறுக்க விரும்பவில்லை தென்னிலங்கை ஊடகமொன்றிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்
எவ்வாறாயினும் அந்தப் பாதுகாப்பை நீக்கி அதை மீண்டும் வழங்குவதற்கான நோக்கம் குறித்து தான் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்தை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் மைத்திரி பால சிறிசேனவும் மீளக் கோரியுள்ளனர்.