நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சியிலிருக்கின்ற சஜித் பிரேமதாஸ அனுரகுமார திசநாயக்க உள்ளிட்டோர் அலட்சியப்படுத்தியதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவு கிராமத்தில் 10 கிலோ மீற்றர் நீளத்தில் இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (30.07.2023) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
காதல் கடிதம் எழுதுவது போல
நாம் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்ட காலம் ஓர் இக்கட்டான காலமாகும். கொரோனா தொற்று, பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்ட அடுத்தடுத்து நிலமைக்குள்தான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசையில் நின்றார்கள். பொருட்களின் விலை அதிகரிப்பு, ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் இடை நடுவில் நிறுத்தப்பட்டன.
இவ்வாறு நாடு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது, இதனால் மக்கள் போராட்டங்கள் வெடித்தன, இதனால் முன்னாள் ஜனாதிபதி பதவி துறக்க நேரிட்டது. அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சக்கு, யாராவது வந்து இந்த ஆட்சியைப் பொறுப்பேற்குமாறு கூறினார்.
அவர்கள் காதல் கடிதம் எழுதுவது போன்று கடிதத்தைத்தான் எழுத்திக் கொண்டிருந்தர்கள். அவர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிந்து வந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கத்தின் பிரயத்தனத்தால் மக்கள் வரிசையில் நிங்கும் நிலமை தற்போது இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்படல் வேண்டும், பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஆளும் கட்சியிலிருந்தாலும், எதிர்க்கட்சியிலிருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குச் சார்பாகத்தான் பேசவேண்டும். மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் அவர்கள்தான் மக்களின் தலைவர்கள் இல்லையேல் அவர்கள் கட்சிக்குத்தான் தலைவராவார்.
பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை
தமிழ் மக்களின் நீண்டகாலம புரையோடிப் போயிருக்கின்ற உரிமைப் பிரச்சனை, உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு கண்டு கொடுப்பவர்களாக மக்கள் தலைவர்கள் இருக்க வேண்டும். தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவுக்கு வருகின்றது, நிதி வருவதற்குரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதன் பின்னர் இன்னும் பொருட்களின் விலை குறைக்கப்படல் வேண்டும். இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
போரதீவுப் பற்றுப் பிரதேசம் பட்டிருப்புத் தொகுதியில் 170 சதுரக் கிரலோ மீற்றர் கொண்ட அதிக நிலப்பரப்புக் கூடிய ஒரு பிரதேச செயலகமாகும்.
இப்பிரதேசத்தில் அதிக மக்கள் காணி இல்லாமல் உள்ளனர். காணி உறுதிப்பத்திரம் இல்லாதோருக்கு எதிர்வருகின்ற 10 ஆம் மாதத்திற்குள் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டும் எனவும், வாழ்வாதாரக் காணியையும் மக்களுக்கு வழங்குமாறு இப்பகுதி பிரதேச செலாளருக்கு நான் தெரிவித்திருக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.