மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் இரு பெண்களை கொலை செய்தது அவர்களது 15 வயது நிரம்பிய பேத்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்னும் இரு பேரன்களை நன்றாக கவனிப்பதாக கூறி அவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் வீடு ஒன்றில் இரு சகோதரிகள் நேற்று (14) காலை 7.30 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான 68 மற்றும் 74 வயது நிரம்பிய இரண்டு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த 15 வயது சிறுமி ஒருவரும் நேற்று (14) காலை சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நடத்திய விசாரணையில் குறித்த சிறுமியே இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது.

அதன்படி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது இரட்டைக் கொலையைச் செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது இரண்டு பாட்டிகளும் தன்னை விட மற்ற இரண்டு பேரக்குழந்தைகளை நன்றாக நடத்தியதால் ஏற்பட்ட விரக்தியில் தான் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கொலைகளின் போது பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதத்தால் தனது கையிலும் காயம் ஏற்பட்டதாக அவர் பொலிஸாரிடம் கூறினார்.
அவரது தாயார் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்த இரண்டு பெண்களில் அந்தப் பெண்ணின் தாயாரும் ஒருவராவார்.
சந்தேகநபரான சிறுமி இன்று (15) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.