இணைய கசினோவால் பல கோடி ரூபா இழப்பு: ஹர்ஷ டி சில்வா கடிதம் மூலம் தெரிவிப்பு

0
93

ஒழுங்குமுறை சட்டங்கள் இல்லாத காரணத்தினால், இணைய கசினோக்களால் நாடு பல கோடி ரூபாவை இழக்கின்றது என அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, நிதி அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இணைய சூதாட்ட விடுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரைவான நடவடிக்கைகளுக்கும் அவர் குறித்த கடிதத்தின் வாயிலாக அழைப்பும் விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

அதனடிப்படையில், கசினோ உள்ளிட்ட சூதாட்ட வியாபாரங்களில் இருந்து பெற வேண்டிய வரி பாக்கிகளை வசூலிக்க தேவையான சட்டங்களை இயற்றுவதற்கு மேலும் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மிக முக்கியமான ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

2010ஆம் ஆண்டின் கேசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டம் எண். 17 இன் பிரிவு 3 உடன் படிக்கப்பட்ட பிரிவு 4 இன் கீழ் உள்ள ஒழுங்குமுறைகளை குழு பரிசீலித்தது. அதன்பின்னர் கமிட்டி உத்தரவு மற்றும் ஒழுங்குமுறைக்கு ஒப்புதல் அளித்திருந்ததையும் அவர் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலப் பலன்கள் சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் அரசாங்க நிதிக்கான குழுவும் இந்த உத்தரவிற்கு ஒப்புதல் அளித்தது.

இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, மயந்த திஸாநாயக்க, சந்திம வீரக்கொடி, நாலக கொடஹேவா, ஹர்ஷன ராஜகருணா, மதுர விதானகே ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.