பிரதம நீதியரசர் மீது பாதணியை வீசிய சட்டத்தரணி – பரபரப்பு சம்பவம்: மோடி கண்டனம்

0
29

இந்தியப் பிரதம நீதியரசர் இந்து மதம் குறித்து கூறிய கருத்துகளால் கோபமடைந்த சட்டத்தரணி அவர் மீது பாதணியை வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கடுமையான பொது அவமதிப்பு மற்றும் பாதுகாப்பு மீறலாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று டெல்லியில் நடந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ராகேஷ் கிஷோர் என்ற சட்டத்தரணி இந்தியப் பிரதம நீதியரசர் பி ஆர் கவாய் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். நீதிமன்ற அறையிலிருந்த மூன்று சட்டத்தரணிகள், பிரதம நீதியரசர் மீது ஒரு பாதணி வீசப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளால் நீதிமன்ற அறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது, இந்து மதத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என தாக்குதல் நடத்திய சட்டத்தரணி கிஷோர் கோசம் எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில் சம்பவத்தின் பின்னர் பிரதம நீதியரசர் கவாய் அமைதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் தாக்குதல் நடத்திய சட்டத்தரணி கிஷோர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.