CBI கைக்கு சென்ற கரூர் வழக்கு – மனம் திறந்த விஜய்

0
45

உச்ச நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட விடயம் தமிழக அரசியலில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் (Vijay) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நீதி வெல்லும்!” என பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக விஜய் மற்றும் தவெக தரப்பு வாதங்களை கேட்காமல் அவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைத்ததையும் கண்டித்தது.

விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த குழுவில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டிராத 2 ஐபிஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு தமிழக காவல்துறையை அவமதிப்பது போல இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், “நீதி வெல்லும்!” என தவெக தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.