இந்திய உதவி திட்டத்தின் கீழ் யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசசார மத்திய நிலையம் “யாழ் பட்டினத்தின் கலாச்சார மண்டபம்” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 200 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தின் பணிகள் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியா தூதுவர் பாக்லே, இந்தியா மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் டாக்ஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், அரச உயர் அதிகாரிகள் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாகன பேரணியும் இடம்பெற்றது.

யாழ் கலாசார நிலைய நிர்மாணப்பணிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட பின்னர் அதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய் ஷங்கர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை 11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம், நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
