“எனக்கு பெயர் தந்தவர் தலைவர் பிரபாகரன் தான்”: அவரின் இழப்பு வேதனையாது என்கிறார் கருணா

0
89

“கருணா அம்மான்” என்னும் பெயரை எனக்கு தந்தவர் தலைவர் பிரபாகரனாகும். அதனை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தலைவருக்கும் கருணா அம்மானுக்கும் இடையில் நடைபெற்றது ஒரு சிறிய பிரச்சினை. பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட பிரச்சினை.

அதனை வைத்து சிலர் பூதாகரமாக்கிவருகின்றனர். தலைவரின் இழப்பு என்பதை இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கும் போதும் அது ஒரு வேதனையான விடயமாக இருக்கின்றது. அவரின் உடலை நான் சென்றே அடையாளப்படுத்தினேன். அது பாரிய வேதனையான விடயமாகும்.

இன்று எத்தனையோ பேர் முதலைக்கண்ணீர் வடித்துக் கொண்டு தலைவரின் பெயரை விற்று வெளிநாடுகளில் நிதிகளையும் வசூலித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

நான் தலைவருடன் 22 வருடங்கள் பயணித்தவன். இன்றும் எனது அடி மனதில் அவரது எண்ணங்களும் நினைவுகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்று கருணா அம்மான் என்ற பெயர் வருவதற்கு காரணமே தலைவர் பிரபாகரன் தான். அதனை நான் மறக்கமாட்டேன். அதனை மனதில்கொண்டு எமது போராளிகளை சிறந்தமுறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

இன்று முக்கியமான ஒரு தினம். தமிழ் பெரும் தலைவர் இன்று திருகோணமலையில் தகனம் செய்யப்படுகின்றது. அவரை மறக்க முடியாது.

நான் தலைவருடன் இந்தியாவிலிருந்தபோது அடிக்கடி சம்பந்த ஐயாவினையும், மாவை ஐயாவினையும் சந்தித்துபேசுவோம். தள்ளாடும் வயதிலும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த ஒரு மாமனிதர்.

அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை எமது கட்சிசார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் இழப்பு என்பது பெரும் இழப்பாகவே பார்க்கின்றேன்.

தமிழர்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டதே எமது கட்சியாகும். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பதவிக்காக போட்டி நடைபெறுகின்றது.

பதவிக்காக சுமந்திரனும் சிறீதரனும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அந்த கட்சியானது இதுவரை காலமும் சம்பந்தன் என்ற ஒரு தூணில்தான் நின்றது.

இன்று அந்த தூணும் சாய்ந்துவிட்டது. இன்று அவர்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் அழைக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.